மேற்குவங்கத்தில் ராம நவமி அன்று நடைபெற்ற வன்முறை குறித்து என்ஐஏ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.
இந்துத்துவா அமைப்பினர் ராம நவமி ஊர்வலங்களை, முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்ற ஆண்டு, ராம நவமி ஊர்வலங்களின் போது மிகவும் விரிவான அளவில் தாக்குதல்களும், மோதல்களும் ஏவப்பட்டன.குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் கான்கோன் மற்றும் மகாராஷ்டிரா, குஜராத், கோவா, ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தில் ஷிப்பூர், ஹவுரா ஆகிய இடங்களில் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்லாது, மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் ராமநவமி ஊர்வலங்களின் போது வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ்-சங்பரிவார அமைப்புகள் ராம நவமி ஊர்வலங்களைப் பயன்படுத்திக்கொண்டு, முஸ்லீம் பகுதிகளுக்குள் நுழைந்து, மசூதிகளுக்கு முன்பு, வாள்கள் மற்றும் கொடிய ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் விதங்களில் கூச்சல் போட்டுள்ளனர். இதன் காரணமாக ஹவுரா மற்றும் தால்கோலா ஆகிய பகுதிகளில் மோதல்கள் நடந்து, ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.பலர் காயமுற்றிருக்கின்றனர்.
மேற்குவங்கத்தில், பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் மதவெறி அடிப்படையில் மக்களிடையே பிளவினையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒருவருக்கொருவர் உடந்தையாக இருந்து வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், இவ்வாறு அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், ராமநவமி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழக்குகளை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.